சனிக்கிழமை, ஏப்ரல் 19, 2025
சனிக்கிழமை, ஏப்ரல் 19, 2025

HomeFact Checksஇலங்கையின் முதலாவது HMPV நோயாளர் 2025 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டாரா?

இலங்கையின் முதலாவது HMPV நோயாளர் 2025 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டாரா?

Claim: இலங்கையின் முதலாவது HMPV நோயாளர் அண்மையில் கண்டியில் பதிவு செய்யப்பட்டார்.

Fact: இலங்கையில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளிலும் HMPV நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு விஞ்ஞானத் துறையின் பேராசிரியரும் தலைவருமான வைத்தியர் நீலிகா மாலவிகே உறுதிப்படுத்தியதோடு, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ HMPV தொடர்பில் தற்போது பரவும் செய்திகள் தவறானவை என்று தெளிவுபடுத்தினர்.

சீனா, மலேசியா, ஹொங்காங் மற்றும் பிற ஆசிய நாடுகளில் பருவகால நோய்கள் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் வெளியாகியுள்ள நிலையில், இலங்கையின் முதலாவது HMPV (ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸின்) நோய்த்தொற்றாளர் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறி பல சமூக ஊடக பயனர்கள் பேஸ்புக், டிக்டொக் மற்றும் பிற சமூக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இலங்கையில்  கண்டியில் முதல் நோயாளி கண்டறியப்பட்டதாக கூறி இந்த பதிவுகள் ஜனவரி 8 ஆம் திகதி முதல் பரவத் தொடங்கின.

“முதலாவது HMPV தோற்று இலங்கையில் (கண்டி) உறுதிசெய்யப்பட்டது. முன்னெச்சரிக்கையாக இருங்கள்” என பேஸ்புக் பயனர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இலங்கை மருத்துவ சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்  இணைப்புடன் “Breaking News! இலங்கையில் HMPV வைரஸ் தொற்றுக்குள்ளானவர் ஒருவர் கண்டி பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.” எனும் தலைப்பில் “People’s Voice” என்ற பேஸ்புக் பக்கதில் மற்றுமொரு பதிவு வெளியாகியிருந்தது.

‘மீண்டும் முகக்கவசம் கட்டாயமாக்கப்படுமா‼️’ என்ற தலைப்பில் “விசேட செய்தியொன்று: HMPV நோயாளி கண்டியில் அடையாளம் காணப்பட்டுள்ளார்” எனும் குரல்பதிவோடு மற்றொரு பதிவை @radionmannar என்ற டிக்டொக் பயனர் பதிவிட்டிருந்தார்.

பேஸ்புக் மற்றும் டிக்டொக்கில் இதேபோன்ற பதிவுகளை நியூசெக்கர் குழு கண்டறிந்தது. அவற்றுள் ஒரு சில பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

Fact Check/Verification

இவ்விடயம் தொடர்பில் கீவேர்ட் தேடலை நியூஸ்செக்கர் மேற்கொண்ட போது இலங்கையில் ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) பரவல் பற்றி பல செய்தி கட்டுரைகள் வெளியாகியிருப்பதை நாம் கண்டோம். தற்போது சீனாவில் பரவி வரும் HMPV ஏற்கனவே இலங்கையில் ஒரு சில சந்தர்ப்பங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதை இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) உறுதிப்படுத்தியுள்ளது என்பதை இந்த கட்டுரைகள் தெளிவுபடுத்துகின்றன. எனவே தேவையற்ற அச்சம் கொள்ள எந்த காரணமும் இல்லை என்று சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளனர். இந்த அறிக்கைகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.

“HMPV நிலைமை கோவிட்-19 க்கு ஒத்ததாக இருப்பதாக சமூக ஊடகங்களில் தேவையற்ற அச்சம் பரப்பப்பட்டுள்ளது. HMPV என்பது புதிய வைரஸ் அல்ல. இது உலகளவில் சுமார் 20 ஆண்டுகளாக உள்ளது. இலங்கையிலும் கூட 2023 டிசம்பரில் இந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டமைக்கான ஆராய்ச்சி சான்றுகள் உள்ளன. அத்தோடு 2024ஆம் ஜனவரி ஆண்டுயில், கண்டி மருத்துவமனையின் வைரஸ் தொற்று நிபுணர் வைத்தியர் அதீகா அக்ரம், இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அடையாளம் கண்டார். எவ்வாறாயினும், இந்த ஆண்டு இலங்கையில் HMPV நோய்த்தொற்று எதுவும் இதுவரை பதிவாகவில்லை.” என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் பேராசிரியரும் தலைவருமான வைத்தியர் நீலிகா மாளவிகே, 2025 ஜனவரி 8 ஆம் திகதி இலங்கை மருத்துவ சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் பொழுது தெரிவித்தார்.

மேலும், “அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேராசிரியர் நீலிகா மாளவிகே வெளியிட்ட கருத்தினை திருபுபடுத்தி இந்த தவறான தகவல்கள் வெளியாகியுள்ளது. சில ஊடக நிறுவனங்கள் இந்த விடயம் தொடர்பில் முற்றிலும் தவறாக செய்தி வெளியிட்டன. எனவே ஊடக நிறுவனங்களை பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வைரஸ் தொற்று தொடர்பில் நாட்டில் 20 பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நோய் அறிகுறியுடன் அடையாளம் காணப்பட்ட நபர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, (HMPV)  வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இலங்கையில் (HMPV) வைரஸ் நோய் தொற்றாளர் எவரும் இதுவரை பதிவாகவில்லை.” என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ 2025 ஜனவரி 9 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின் போது HMPV நோய்த்தொற்று பற்றிய வதந்திகள் தொடர்பில் ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த  சமரவீர எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

Conclusion

இலங்கையின் முதலாவது HMPV நோயாளர் அண்மையில் கண்டியில் பதிவு செய்யப்பட்டார் என தவறான கூற்றுகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. HMPV ஒரு புதிய வைரஸ் அல்ல என்றும் இதற்கு முன்னர் இவ்வைரஸ் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த ஆண்டு இவ்வைரஸ் தொற்றுக்குள்ளான புதிய நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை என்பதால் அச்சம் கொள்ளத்தேவையில்லை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Result: False

எமது மூலங்கள்
08.01.2025 அன்று The Morningஇல் வெளியான செய்தி அறிக்கை
07.01.2025 அன்று Ada Deranaஇல் வெளியான செய்தி அறிக்கை
08.01.2025 அன்று Ada Derana YouTube இல் வெளியான HMPV பற்றி இலங்கை மருத்துவர் சங்க ஏற்ப்பாட்டில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் காணொளி
10.01.2025 அன்று News 1st YouTubeஇல் வெளியான சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவின் பாராளுமன்ற உரை


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.

Keerthika Mahalingam
Keerthika Mahalingam
Keerthika Mahalingam is a Tamil Fact-Checker currently pursuing a Diploma in Diplomacy and World Affairs at the Bandaranaike International Diplomatic Training Institute. She began her career at the Sri Lanka Press Institute (SLPI) as a fact-checker before advancing to roles as a media literacy trainer and training coordinator. With additional experience as a translator and interpreter, she brings a diverse skill set to her work. In her free time, she enjoys writing and pencil sketching, blending creativity with her passion for media and communication.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular