வியாழக்கிழமை, ஏப்ரல் 17, 2025
வியாழக்கிழமை, ஏப்ரல் 17, 2025

HomeFact Checksஅரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினாரா? 

அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினாரா? 

Claim: அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.

Fact: அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும், ஆனால் அதை உடனடியாக செயற்படுத்த முடியாது, அதற்குரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் கூறினார்.

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது நாட்டில், குறிப்பாக தமிழ் சமூகங்களிடையே நீண்ட காலமாக முக்கிய பேசுபொருளாகவுள்ளது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நோக்கி நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதைக் குறிக்கும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர், மேலும் இது அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.

இந்நிலையில், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என தேசிய மக்கள் கட்சியின் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பரவலாக பரவி வருகின்றன. அண்மையில் வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

‘அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது – பேரினவாத சிங்கள அமைச்சர்’ என்ற வாசகத்துடன், அமைச்சர் பிமல் ரத்நாயக்க கலந்துகொண்ட வவுனியா ஊடகவியலாளர் சந்திப்பின் படத்தை X தளத்தில் பகிர்ந்த பயனரொருவர் பதிவிட்டிருந்தார்.

அரசியல் கைதி

இதே கூற்றை கிளிக்பைட் தலைப்புகளாகவும், விளக்கப்படங்களாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கும் பல பதிவுகளையும் நாம் அவதானித்தோம். இந்த பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

Factcheck / Verification

இப்பதிவுகளின் உண்மைத்தன்மையை அறிய ‘தமிழ் அரசியல் கைதிகள்’ மற்றும் ‘பிமல் ரத்நாயக்க’ போன்ற முக்கிய சொற்களின் மூலமான தேடலினூடாக நாம் எமது ஆய்வை தொடங்கினோம். அதன்போது வவுனியாவில் ஊடகவியலாளர்களுக்கு அமைச்சர் வழங்கிய கருத்துகள் குறித்து பிரதான தமிழ் ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தியறிக்கைகளை கண்டோம்.

அரசியல் கைதிகளை விடுவிப்பது சாத்தியம் என்றாலும், அந்நடவடிக்கைகளை உடனடியாக செயற்படுத்த முடியாது என்று அமைச்சர் கூறியதாகவே இப்பிரதான செய்தியூடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றை இங்கே மற்றும் இங்கே காணலாம்.

தமிழ் ஊடக அலைவரிசைகளில் வெளியான செய்தி அறிக்கைகளில் தமிழ் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட காணொளி பிரதியே பயன்படுத்தப்பட்டிருந்தது.  எனவே, அமைச்சரின் ஊடகவியலாளர் சந்திப்பின் காணொளியின் சில தருணங்களை Google Reverse Image Search மூலம் ஆராய்ந்தோம். இதன்போது “அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமா? பிமல் ரத்நாயக்க – நிச்சயமாக, அது சாத்தியம்.” என்ற தலைப்பில் மார்ச் 29, 2025 அன்று “Vanni voice” பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் முழு நீள காணொளியைக் கண்டோம். 

அரசியல் கைதி

“அரசியல் கைதிகளை விடுவிப்பது சாத்தியம், அது எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் உள்ளது. நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். நாம் இந்த அரசாங்கத்தை ஸ்தாபித்து நான்கரை மாதங்களே கடந்துள்ள போதிலும் நாம் நிச்சயமாக கைதிகளுக்கு நீதியை வழங்குவோம். அத்துடன், பல்வேறு அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எமது வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.” என அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி உடனடியாக விடுதலை வழங்க முடியுமா என ஊடகவியலாளர் மீண்டும் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர், “ஆம், ஜனாதிபதி தனது அதிகாரங்களைப் பயன்படுத்தலாம், ஆனால் அவருக்கும் சில நடைமுறைகள் மற்றும் வரம்புகள் உள்ளன” என்று தெளிவுபடுத்தினார்.

மேலும், வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கேள்விகளை எழுப்பிய வடக்கு மாகாண ஊடகவியலாளர் மனோஜ் சிறிதரனின் முகநூல் பதிவையும் நாம் கண்டோம். இந்த தவறான கூற்றுக்கள் குறித்து ஒரு விளக்கத்தை வெளியிட்ட சிறிதரன், “அவர்கள் (அரசியல் கைதிகள்) விடுவிக்கப்படலாம் என்றாலும், நாம் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் காரணமாக அதற்கு நேரம் எடுக்கும் என்று அமைச்சர் தெளிவாகக் கூறினார். இது தேர்தல் காலம் என்பதால், இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றே பரப்பப்பட்ட தவறான தகவலா அல்லது கேள்வி பதில் ஆங்கிலத்தில் இருப்பதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பகிரப்பட்ட தவறான தகவல்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒரு ஊடகவியலாளர் என்ற முறையிலும், ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்ட கேள்வியைக் கேட்டவர் என்ற முறையிலும், இதை சரிபார்த்து தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.” என அவர் தெளிவுபடுத்தியிருந்தார். 

அரசியல் கைதி

Conclusion

அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது என தேசிய மக்கள் கட்சியின் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியதாக கூறப்படும் பதிவுகள் உண்மையல்ல. அரசியல் கைதிகளை விடுவிக்க முடியுமென்ற போதிலும் அதனை உடனடியாக செயற்படுத்த முடியாது எனவும், இதில் பின்பற்றவேண்டிய சில நடைமுறைகள் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Result: False

எமது மூலங்கள்
29.03.2025 அன்று Virakesari.lk வெளியான செய்தியறிக்கை.
29.03.2025 அன்று News 1st Tamil யூடியூப் அலைவரிசையில் வெளியான செய்தியறிக்கை.
29.03.2025 அன்று Vanni Voice பேஸ்புக் பக்கத்தில் வெளியான ஊடகவியலாளர் சந்திப்பின் காணொளி.
30.03.2025 அன்று பிராந்திய ஊடகவியலாளர் மனோஜ் ஸ்ரீதரன் பதிவிட்ட பேஸ்புக் பதிவு


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.

Keerthika Mahalingam
Keerthika Mahalingam
Keerthika Mahalingam is a Tamil Fact-Checker currently pursuing a Diploma in Diplomacy and World Affairs at the Bandaranaike International Diplomatic Training Institute. She began her career at the Sri Lanka Press Institute (SLPI) as a fact-checker before advancing to roles as a media literacy trainer and training coordinator. With additional experience as a translator and interpreter, she brings a diverse skill set to her work. In her free time, she enjoys writing and pencil sketching, blending creativity with her passion for media and communication.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular