Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks
Claim: விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின் அண்மையில் பிணை வழங்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இவ்வருட சித்திரைப் புத்தாண்டை தனது குடும்பத்தினருடன் வீட்டில் கொண்டாடுவதைக் காட்டும் பதிவுகள்.
Fact: இவ்வருடம் அவர் சித்திரைப்புத்தாண்டை கொண்டாடுவதைக் காட்டவில்லை. இப்புகைப்படங்கள் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென்னகோனின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டவை.
கடந்த மாதம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின் அண்மையில் பிணை வழங்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், ஏப்ரல் 14 ஆம் திகதியன்று சித்திரை/ சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை குடும்பத்தினருடன் வீட்டில் கொண்டாடுவதைக் காட்டும் புகைப்படங்களை சமீபத்தில் பலர் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர்.
பயனரொருவர், “புதுவருடத்தின்போது அவர் குடித்த அனைத்து விஸ்கிகளும்” என சிங்கள மொழியில் ஒரு கூற்றுடன் இந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இது மார்ச் மாதம் முன்னெடுக்கப்பட்ட ஒரு தேடுதலின்போது தென்னகோனின் வீட்டிலிருந்து 1029 மது போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டதைக் குறிக்கிறது.
இதே போன்ற பதிவுகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
2023 டிசம்பர் 31 ஆம் திகதி வெலிகம W15 ஹோட்டலுக்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் 2025 மார்ச் 19 முதல் 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி வரை தேசபந்து தென்னகோன் சிறையில் இருந்தார். அகுனகொலபலஸ்ஸ சிறையிலும் பின்னர் தும்பர் சிறைச்சாலையிலும் பல வாரங்கள் கழித்த பின்னர், தென்னகோனுக்கு 2025 ஏப்ரல் 10 ஆம் திகதியன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது.
தென்னகோன் கைது செய்யப்பட்டமை மற்றும் அவருடன் தொடர்புடைய குற்றத்தின் தீவிரத்தன்மை என்பன பெரும் விவாதத்திற்குரிய விடயங்களாக காணப்படும் நிலையில் இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை சமூக ஊடகங்களில் ஏற்படுத்தியது. எனவே இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மையை ஆராய நாம் தீர்மானித்தோம்.
இந்த புகைப்படங்களின் உண்மைத்தன்மையை அறிய நாம் Google reverse image search முறையைப் பயன்படுத்தி தேடலை மேற்கொண்டபோது, இவை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதியன்று தேசபந்து தென்னகோன் அவரது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டிருப்பதை கண்டறிந்தோம். பல புகைப்படங்களைக் கொண்ட இந்தப் பதிவு “எமது வீட்டில் 2024 சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்” என்ற தலைப்பில் பகிரப்பட்டிருந்தது.
இவ்வருடம்(2025) ஏப்ரல் மாதம், சித்திரைப் புத்தாண்டு தொடர்பில் சமூக ஊடகங்களில் தேசபந்து தென்னகோன் எவ்வித புகைப்படங்களையும் பதிவிடவில்லை. அதேபோல் பிரதான ஊடகங்களிலும் இவ்வருடம் தேசபந்து தென்னகோனின் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை. இவை சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுகள் தவறானவை என மேலும் உறுதிப்படுத்தின.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் 2025 சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை தனது மகன் மற்றும் மனைவியுடன் வீட்டில் கொண்டாடுவதாக காட்டும் புகைப்படங்களுடன் கூடிய சமூக ஊடக பதிவுகள் உண்மையில் 2024 ஆம் ஆண்டில் தேசபந்து தென்னகோனால் அவரது பேஸ்புக் கணக்கில் பகிரப்பட்டவை.
எமது மூலங்கள்
ஏப்ரல் 14, 2024 அன்று தேசபந்து தென்னகோனின் பேஸ்புக் கணக்கில் வெளியிடப்பட்ட பதிவு.
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.